
posted 26th June 2022

வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட மூதாட்டி
தெல்லிப்பளை கொல்லங்கலட்டியில், தனிமையில் வசித்து வந்த மூதாட்டி வன்புணர்வின் பின்னரே கொலை செய்யப்பட்டார் என்று சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கொல்லங்கலட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை மூதாட்டி ஒருவர் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
மூதாட்டியின் சடலம் யாழ்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்ட பின் கொலை செய்யப்பட்டார் என்று உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் தொடர்பில் ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் விரைவில் கைது செய்யப்படுவார் என்று பொலிஸார் கூறினர்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் - விஜயதாஸ ராஜபக்ஷ
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் செயல்பாடுகளை துரிதப்படுத்தி , அதன் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் மூலம் தமது உறவுகளை இழந்தவர்களுக்கு உரிய நீதி பெற்றுக் கொடுக்கப்படும் என்று நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் வந்த அமைச்சர், கடந்த சனிக்கிழமை கல்வியங்காட்டிலுள்ள காணாமல் போனோர் அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள சந்தித்தார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், யாழப்பாணத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் எவ்வாறு செயல்படுகிறது என்பது தொடர்பில் கண்காணித்தேன். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இந்த அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன், இழப்பீட்டு அலுவலகமும் இங்கு செயல்பட்டு வருகிறது.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தால் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவர்கள் முன்னெடுத்து வரும் செயல்பாடுகள் மகிழ்ச்சிக்குரியவையாக உள்ளன. தமது உறவுகளை இழந்த பலரை இங்கு சந்திக்கக்கூடியதாக இருந்தது. இவர்களின் மனக்குறைகள் தொடர்பில் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் கரிசனையுடன் செயல்பட்டு வருகிறது. இதற்கமைய தமது உறவுகளை இழந்தவர்களுக்கு உரிய நீதி பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.

எரிபொருள் வினியோகத்தில் வவுனியா அரச அதிபர் அசமந்தம்
வவுனியாவில் எரிபொருள் வழங்கும் செயல்பாடுகளில் பாரபட்சம் காட்டப்பட்டுவரும் நிலையில் இது தொடர்பில் வவுனியா அரசாங்க அதிபர் அசமந்தமாக இருக்கிறார் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வவுனியாவில் எரிபொருள் வழங்கும் செயல்பாட்டில் அரச நிர்வாகம் சில வழிமுறைகளை கைக்கொண்டிருந்தது. இதன் பிரகாரம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருப்போருக்கு பொலிஸ் அதிகாரி மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய முகமையாளரின் கையொப்பத்துடன் சிட்டை வழங்கப்பட்டு பின்னர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் மேற்பார்வையில் செயலி ஒன்றின் உதவியுடன் எரிபொருள் வழங்கப்பட்டது.
இதனால் பொதுமக்கள் பெரும் அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சிட்டை எடுப்பதற்கு இரண்டு நாட்கள் வரிசையில் காத்திருந்து பின்னர் எரிபொருள் பெறவும் ஒருநாள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த செயல்பாட்டை வவுனியாவில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் செயல்படுத்தவில்லை. இவ்வாறான ஒரு முறைமையை ஏற்படுத்தியது அரசாங்க அதிபரே. இதனை அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் நடைமுறைப்படுத்தாமல் அவர் அசமந்தமாக இருந்துள்ளார்.
இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படாத எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுடையது என்றும், சில உயர் அதிகாரிகள் பரல்கள் மற்றும் வாகனங்களில் போதுமானளவு எரிபொருளை பெறுவதையும் அரசாங்க அதிபர் கண்டுகொள்ளவில்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY